குடும்பத்திற்காக
நமது கஷ்டங்கள் தீருவதற்காக
நமது எல்லோருடைய
மகிழ்ச்சிக்காக எதை
இழப்பதற்கும் துணிந்து...
கனவுகளை அல்ல,
என் நாட்களையே
விற்றுக் கொண்டிருக்கிறேன்
இந்த வெளிநாட்டு மண்ணில்…
விடியல்கள் இங்கே
தொடங்கினாலும்,
என் மனம் இன்னும்
வீட்டு வாசலில் தான்
நின்று கொண்டிருக்கிறது.
அம்மாவின் குரல்
போனில் கேட்கும் போதெல்லாம்,
சம்பளத்தை விட
அந்த வார்த்தைகளே
என்னை உயிரோடு வைத்திருக்கின்றன.
அம்மா “சாப்பிட்டாயா?”
என்று கேட்கும் போது,
நான் “ஆமா”
என்று சொல்லிவிட்டு,
என் தனிமையை
விழுங்கிக் கொள்கிறேன்…
“எப்போ வருவாய்?”
என்ற கேள்வி —
எல்லாம் சேர்ந்து
இந்த பிரிவு எனக்கு
அன்பாகவே வலிக்கச் செய்கிறது.
நாட்களை எண்ணிக் கொண்டே
நான் வேலை செய்கிறேன்,
நாட்களை எண்ணிக் கொண்டே
நீங்கள் காத்திருக்கிறீர்கள்…!
ஒரே ஒரு வித்தியாசம் தான்,
நான் இங்கு பணம் சேமிக்கிறேன்,
நீங்கள் அங்கு என் நினைவை
சேமித்து வைத்திருக்கிறீர்கள்.
ஒருநாள், இந்த வெளிநாட்டு மண்
என்னை விடுவிக்கும்,
அன்று என் கால்கள் அல்ல,
என் மனம் தான் உங்களை
காண முதலில் வீட்டுக்கு ஓடி வரும்…!
என் கையில் பணம் இருக்கும்…
ஆனால் என் உள்ளத்தில்
திரும்பப் பெற முடியாத
ஒரு காலம்
இல்லாமல் போயிருக்கும்…!
இவண்
👑 ராஜா
Comments
Post a Comment